1 யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது.

2 எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள்.

3 எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர்,

4 தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும் சீதோனியருக்குச் சொந்தமான மெயாரா, அபேக்கு வரையிலும், எமோரியரின் எல்லை வரையிலும் உள்ள பகுதிகள்,

5 கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும்.

6 லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் — இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு.

7 இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு” என்றார்.

8 அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை;

9 அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும்,

10 எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும்,

11 கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்;

12 இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.

13 கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர்.

14 லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்.

15 ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:

16 அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்;

17 சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்;

18 யாகசு, கெதமோத்து, மேபாத்து;

19 கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்;

20 பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து;

21 அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார்.

22 இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன்.

23 ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை. அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது.

24 காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன;

25 யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி,

26 எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை.

27 பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள்.

28 காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின.

29 மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன;

30 அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்;

31 கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன.

32 எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார்.

33 ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை.

Joshua 13 ERV IRV TRV