1 பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.

2 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.

3 பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திப்பதாக இருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.

4 தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.

5 கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.

6 அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.

7 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.

8 தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

9 உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள்.

10 யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக என்றான்.

11 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

12 அதற்கு அவன்: கர்த்தர் என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா என்றான்.

13 பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

14 அவனைப் பிஸ்காவின் உச்சியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

15 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

16 கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.

17 அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

18 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.

19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

20 இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

21 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருக்கிறார்; ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

22 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு.

23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

24 அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை என்றான்.

25 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

26 அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா என்றான்.

27 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும் என்று சொல்லி,

28 அவனை எஷிமோனுக்கு எதிராக இருக்கிற பேயோரின் உச்சிக்கு அழைத்துக்கொண்டு போனான்.

29 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும் என்றான்.

30 பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

Numbers 23 ERV IRV TRV