1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:

2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

3 ஆசாரிய ஊழியம் செய்வதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியர்களான ஆரோனுடைய மகன்களின் பெயர்கள் இவைகளே.

4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் இறந்துபோனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;

5 கர்த்தர் மோசேயை நோக்கி:

6 நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.

7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.

8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.

9 ஆகையால் லேவியர்களை ஆரோனிடத்திலும் அவனுடைய மகன்களிடத்திலும் ஒப்புக்கொடு; இஸ்ரவேல் மக்களில் இவர்கள் முழுவதுமாக அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.

11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

12 இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.

13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:

15 லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.

16 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.

17 லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

18 தங்களுடைய வம்சத்தின்படியே கெர்சோனுடைய மகன்களின் பெயர்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.

19 தங்களுடைய வம்சங்களின்படியே கோகாத்துடைய மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

20 தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.

21 கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.

22 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராக இருந்தார்கள்.

23 கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.

24 கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.

25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,

26 வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

27 கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.

28 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், எட்டாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.

29 கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.

30 அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.

31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

32 ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.

33 மெராரியின் வழியாக மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.

34 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராக இருந்தார்கள்.

35 அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.

36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,

37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.

38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.

39 மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரம்பேராக இருந்தார்கள்.

40 அதன் பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,

41 இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக லேவியர்களையும், இஸ்ரவேல் சந்ததியின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.

43 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லோரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்திரெண்டாராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராக இருந்தார்கள்.

44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

45 நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் கர்த்தர்.

46 இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

48 லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு என்றார்.

49 அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,

50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

51 கர்த்தருடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

Numbers 3 ERV IRV TRV