1 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.

2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள். அவருக்குத் துதி களைப் பாடுங்கள். அவர் செய்யும் வியக்கத் தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.

3 கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள். ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!

4 வல்லமைக்காகக் கர்த்தரிடம் போங்கள். உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.

5 அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள். அவர் செய்த அதிசயங்களை யும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

6 நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.

7 கர்த்தரே நமது தேவன். கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.

8 தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள். ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.

9 தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார். தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதி யைச் செய்தார்.

10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். அது என்றென்றும் தொடரும்!

11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன். அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.

12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார். அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.

13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும், ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.

14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை. அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.

15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.

16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார். ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.

17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.

18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள். அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.

19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான். யோசேப்பு நேர்மையானவன் என்பதைக் கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.

20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.

21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார். அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.

22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான். யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.

23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.

24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று. அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.

25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.

26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார். தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.

27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.

28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார். ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.

29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார். எல்லா மீன்களும் மடிந்தன.

30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.

31 தேவன் கட்டளையிட்டார். ஈக்களும் பேன்களும் வந்தன. அவை எங்கும் நிரம்பின.

32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார். நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.

33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார். அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.

34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!

35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும், வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.

36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர். தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.

38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது. ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.

39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார். தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணைத் தேவன் பயன்படுத்தினார்.

40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார். தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.

41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று. பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.

42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.

43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார். மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!

44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.

45 ஏன் தேவன் இதைச் செய்தார்? அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தரைத் துதியுங்கள்!