1 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.

2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.

3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.

4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.

5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன் புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.

6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.

7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.

8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.

9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.

10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.

12 ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.

13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர். என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.

14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர். என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.

16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர். உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர். நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.

17 உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.

18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும். நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும். அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.

20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள். அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.

21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன். உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.

22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன். உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.

23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.

24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும். நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

சங்கீதம் 139 ERV IRV TRV