1 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன். நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும். விரைவாக எனக்கு உதவும்!

2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும். எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.

3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப் பாட்டோடிருக்க எனக்கு உதவும். நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.

4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும். தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும். தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.

5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும். அது அவன் நற்செயலாகும். உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும். அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும். நான் அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.

6 அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும். அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.

7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள். அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.

8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன். நான் உம்மை நம்புகிறேன். தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.

9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள். அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும். அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.

10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.

சங்கீதம் 141 ERV IRV TRV