1 பின்பு, பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்; ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.

2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின்மீது அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்.

3 அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: ⁽“கடவுளாகிய ஆண்டவரே,␢ எல்லாம் வல்லவரே,␢ உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன.␢ மக்களினங்களின் மன்னரே,␢ உம் வழிகள் நேரியவை,␢ உண்மையுள்ளவை.⁾

4 ⁽ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்?␢ உமது பெயரைப்␢ போற்றிப் புகழாதவர் யார்?␢ நீர் ஒருவரே தூயவர்,␢ எல்லா மக்களினங்களும்␢ உம் திருமுன் வந்து வணங்கும்.␢ ஏனெனில் உம் நீதிச் செயல்கள்␢ வெளிப்படையாயின.”⁾⒫

5 இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில், அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.

6 அப்பொழுது ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் கோவிலிலிருந்து வெளியே வந்தார்கள்; அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும் மார்பில் பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள்.

7 அந்த நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழும் கடவுளின் சீற்றத்தால் நிறைந்த ஏழு பொன் கிண்ணங்களை அந்த ஏழு வானதூதர்களுக்கும் அளித்தது.

8 கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின. அதனால் அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் கோவிலுள் நுழைய முடியவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 15 ERV IRV TRV